07.061 ஆலந் தான்உகந்அ௫ளியவர் : சுந்தரர்திருமுறை : ஏழாம்-திருமுறை பண் : தக்கேசிநாடு :தொண்டைநாடு தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1 உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 2 திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 3 குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம்புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 4 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 5 திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 6 விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 9 எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
சுவாமி : ஏகாம்பரநாதர்; அம்பாள் : ஏலவார்குழலி. 11
Read more at: https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thiruvekambam-aalanth-thaanukanth-thamuthusei/#gsc.tab=0
No comments:
Post a Comment